இன்று அதிகாலை வங்காரம்பேட்டையில் கோர விபத்து..!

பாபநாசம்: தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் இன்று காலை டாஸ்மாக் சரக்கு ஏற்றி வந்த லாரி மரத்தில் மோதி தீப்பிடித்ததில் லாரி டிரைவர், கிளீனர் கருகி இறந்தனர். ரூ.26 லட்சம் மதிப்புள்ள சரக்குகளும் எரிந்து போனது. கோவையில் இருந்து நேற்று இரவு ஒரு லாரி தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்துக்கு வந்து கொண்டிருந்தது. லாரியில் ரூ.26 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள பிராந்தி பாட்டில்கள் இருந்தது. இவை டாஸ்மாக் கடைகளுக்கு சப்ளை செய்ய கொண்டு வரப்பட்டது. இன்று காலை 6 மணிக்கு அந்த லாரி தஞ்சை மாவட்டம் பாபநாசம் வங்காரம்பேட்டை திருப்பத்தில் வந்தபோது திடீரென லாரி ,டிரைவர் கட்டுப்பாட்டை மீறி தாறுமாறாக ஓடி ரோட்டோரம் உள்ள ஒரு தூங்குமூஞ்சி மரத்தில் மோதியது. மோதிய வேகத்தில் லாரி தீப்பிடித்தது. லாரி கிளீனர் அந்த இடத்திலயே இறந்தார். டிரைவர் காயங்களுடன் கீழே குதித்தார்.


 அப்போது அவரது உடலிலும் தீப்பிடித்தது. அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவரை கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். லாரி தீப்பிடித்ததும் மளமளவென பிராந்தி பாட்டில்களிலும் தீப்பற்றி வெடித்து சிதறியது. லாரியில் மொத்தம் 530 கேஸ் பிராந்தி பாட்டில்கள் இருந்தது. அதன் மதிப்பு ரூ.26 லட்சத்து 40 ஆயிரம். பிராந்தி பாட்டில்கள் அனைத்தும் எரிந்து போனது. இந்த தீ அருகில் உள்ள வைத்திலிங்கம், முருகானந்தம் என்பவரது குடிசை வீடுகளிலும் பற்றி எரிந்தது. தீ விபத்து பற்றி தகவல் அறிந்ததும் பாபநாசம், கும்பகோணத்தில் இருந்து தீயணைப்பு வண்டிகள் வந்தது. தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.பாட்டில்கள் வெடித்து சிதறியதால் தீயை அணைக்க வீரர்கள் சிரமப்பட்டனர்.
 அதற்குள் லாரி, அதில் இருந்த பிராந்தி மற்றும் அருகில் உள்ள 2 குடிசை வீடுகள் எரிந்து சாம்பலானது. லாரிக்குள்ளேயே இறந்தபோன கிளீனர் உடலும் எரிந்து போனது. பொக்லைன் எந்திரம் கொண்டு வந்து எரிந்து போன லாரியை அப்புறப்படுத்தினர். இந்த விபத்து காரணமாக தஞ்சை- கும்பகோணம் சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போக்குவரத்து மாற்று வழியில் திருப்பி விடப்பட்டது. விபத்தில் காயமடைந்த லாரி டிரைவர் பெயர் கணேசன் என்று விசாரணையில் தெரியவந்தது. இவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து விட்டார். அவர் சிதம்பரம் அருகே உள்ள குமராட்சியை சேர்ந்தவர். கிளீனர் பெயர் உடனே தெரியவில்லை. பாபநாசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.





Post a Comment

0 Comments