முஸ்லிம் மாணவிகளின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி..!

மே 1 அன்று நடைபெறவுள்ள அகில இந்திய மருத்துவ கவுன்சிலிங் நுழைவுத் தேர்வில் கலந்து கொள்ளும் மாணவிகள் தலை முக்காடு அணியக் கூடாது என்றும் முழு கை சட்டைகளை அணியக்கூடாது என்றும் சிபிஎஸ்இ சமீபத்தில் அறிவித்திருந்தது. தேர்வில் முறைகேடுகளை தடுப்பதற்கு இம்முறை பின்பற்றப்படுவதாக ஒரு விநோதமான காரணத்தையும் சிபிஎஸ்இ தெரிவித்தது. பர்தா அணியும் முஸ்லிம் மாணவிகள் இந்த அறிவிப்பினால் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.
சிபிஎஸ்இயின் இந்த அறிவிப்பை கண்டித்து கேரளாவின் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் உறுப்பினர்கள் மற்றும் மாணவிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். மாணவிகளின் வீரியமிக்க போராட்டமும் நியாயத்திற்காக அவர்கள் எழுப்பிய குரலும் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. தலைநகர் டெல்லியிலும் போராட்டம் நடைபெற்றது.
சிபிஎஸ்இ அறிவிப்பை எதிர்த்து அம்னா பின்த் பஷீர் என்ற மாணவி கேரளா உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மருத்துவ நுழைவு தேர்வில் கலந்து கொள்ளும் மாணவிகள் முக்காடு அணிவதற்கும் முழுகை சட்டை அணிவதற்கும் எவ்வித தடையும் விதிக்கக் கூடாது என்று தீர்;ப்பளித்துள்ளது. மாணவிகளை சோதனையிட வேண்டிய அவசியம் இருந்தால் பெண் பணியாளர்களை வைத்து சோதனை நடத்தலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மத அடிப்படையில் உடையை அணிவது அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமை என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தங்களின் உரிமையையும் கண்ணியத்தையும் காப்பதற்கு போராட்டங்களை நடத்தி அதில் வெற்றியும் கண்டுள்ள இம்மாணவிகளுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.

Post a Comment

0 Comments