நோன்பு கஞ்சிக்கான அரிசியை முன்கூட்டியே வழங்க தமிழக அரசுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை

சென்னை: ரமலான் நோன்பு துவங்கும் முன்பே நோன்பு கஞ்சிக்கான அரிசியை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாநில நிர்வாகக் குழு கூட்டம் சென்னையில் இன்று நடந்தது. கட்சி தலைவர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் நடந்த கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முகமது அபுபக்கர், பொருளாளர் எம்.எல்.ஏ.ஷாஜகான், எம்.அப்துல் ரகுமான் எம்.பி. உள்பட பலர் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு, உத்தகரகண்ட் வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் குடும்பங்களுக்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. மேலும் பிரதமர் நிவாரண நிதிக்கு கட்சி சார்பில் ரூ.1 லட்சம் வழங்கப்படும். தினத்தந்தி அதிபர் டாக்டர். பா. சிவந்தி ஆதித்தனின் மறைவு தமிழக பத்திரிக்கை உலகத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு. அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் தினத்தந்தி குழும ஊழியர்களுக்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது. புனித ரமலான் நோன்பு வரும் ஜூலை மாதம் 10ம் தேதி துவங்கவிருக்கிறது. இதனால் நோன்பு துவங்கும் முன்பே நோன்புக் கஞ்சிக்கான அரிசியை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Post a Comment

0 Comments