வாந்தி, பேதியால் பாதிக்கப்பட்ட 2 வயது குழந்தை சாவு தஞ்சை தனியார் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை..!

தஞ்சையில் வாந்தி பேதியால் பாதிக்கப்பட்ட 2 வயது குழந்தை இறந்தது. இதையடுத்து தனியார் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டனர்.
2 வயது குழந்தை
தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை ஆதாம் நகரைச் சேர்ந்தவர் சாகுல்அமீது. பெயிண்டர். இவருடைய மனைவி ஷாகிராபேகம். இவர்களுடைய மகள் நசீராபேகம்( வயது2). இந்த நிலையில் நேற்று முன்தினம் குழந்தை நசீராபேகத்திற்கு திடீரென வாந்திபேதி ஏற்பட்டது. இதையடுத்து குழந்தையை சிகிச்சைக்காக தஞ்சை வ.உ.சி. நகரில் உள்ள ஆர்.கே. நர்சிங்ஹோமில் சேர்த்தனர்.

அங்கு நசீராபேகத்திற்கு டாக்டர் குழுவினர் சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு நசீராபேகத்திற்கு உடல் நிலை மேலும் மோசமானது. இதனால் மேல் சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள அரசு ராஜாமிராசுதார் ஆஸ்பத்திரிக்கு டாக்டர்கள் பரிந்துரை செய்தனர். இதையடுத்து பெற்றோர் உடனடியாக குழந்தையை அரசு ராஜாமிராசுதார் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலன் இன்றி குழந்தை இறந்தது.
மருத்துவமனை முற்றுகை
உடனே சாகுல்அமீது மற்றும் அவருடைய உறவினர்கள் குழந்தை நசீராபேகத்தின் உடலை எடுத்துக் கொண்டு தனது உறவினர்களுடன் வ.உ.சி. நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வந்தனர். அப்போது அவர்கள், குழந்தை இறப்பிற்கு காரணம் தனியார் மருத்துவமனை அளித்த தவறான சிகிச்சை தான். உங்கள் மருத்துவமனையில் பணிபுரிந்த நர்சு செல்போனில் பேசிக்கொண்டு எனது குழந்தைக்கு ஊசி போட்ட பின்னர் தான் உடல்நிலை மோசமானது. எனவே குழந்தை இறப்பிற்கு ஆஸ்பத்திரி நிர்வாகம் முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என்று கூறி முற்றுகையிட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோ, இன்ஸ்பெக்டர் சிட்டிபாபு, தஞ்சை நகர தெற்கு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருதரப்பினரிடமும் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் அங்கிருந்து கலைந்து சென்றனர். காலை 6.30 மணியில் இருந்து 7.30 மணி வரை இந்த முற்றுகை போராட்டம் நடந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Post a Comment

0 Comments