திருச்சி ஜமால் முகம்மது கல்லூரிக்கு தேசிய விருது...!

இந்த விருதுக்காக இந்தியா முழுவதுமிருந்து 56 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதில் இம்முறை தமிழகத்தில் இருந்து இரண்டு விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது. சிறந்த சமூகத்தொண்டு புரிந்தமைக்காக மத்திய அரசால் சிறந்த கல்லூரியாக திருச்சி ஜமால் முகமது கல்லூரி தேர்வு செய்யப்பட்டது. கல்லூரிகளுக்கு இடையேயான போட்டிகளில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் தேசிய விருது பெறுவதும் இதுவே முதன் முறையாகும்.என்எஸ்எஸ் அலுவலர்களுக்கான தேசிய விருதை கல்லூரியின் ஆங்கில துறை பேராசிரியர் அப்துல்ஹக்கீம் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் பெற்றுக்கொண்டார். ஜனாதிபதியால் அவர் கவுரவிக்கப்பட்டார். கல்லூரியின் என்எஸ்எஸ் சார்பாக மாணவர்களுக்கு மனம், உடல்திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது. மரக்கன்று நடும் விழா முகாம் மூலம் 15 ஆயிரத்து 600 மரக்கன்று நடப்பட்டது. இந்த ஆண்டு 1,335 யூனிட் ரத்ததானம் மாணவர்கள் வழங்கி உள்ளனர். எய்ட்ஸ், சுற்றுப்புறச்சூழல், தூய்மை இந்தியா திட்டம் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
மண்ணச்சநல்லூர் தாலுகாவில் சிறுகுடி, வெங்கங்குடி, வீராணி, எஸ்.புதூர், ஈச்சம்பட்டி உள்ளிட்ட கிராமங்களை தத்தெடுத்து பல்வேறு பணிகளை செய்தது. கிராம மக்களுக்கு தேவையான குளங்கள் தூர்வாருதல், மருத்துவ முகாம், புத்தகம் வழங்குதல், தண்ணீர் வசதி, சாலை வசதி போன்றவை செய்து தருதல், பள்ளிகளை சீரமைத்தல், கண்தானம், போதை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டது. இப்பணியை பாராட்டியே தற்போது மத்திய அரசின் தேசிய விருது கிடைத்துள்ளது.

இவ்விருதை பாராட்டி மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன், விளையாட்டு மற்றும் இளைஞர் நலன்துறை அமைச்சர் சுந்தர்ராஜன், கல்லூரி கல்வி இயக்குனர் சேகர் ஆகியோர் கல்லூரியை வாழ்த்தினர். இவ்விருது பெற்றதற்காக கல்லூரி செயலாளர் மற்றும் தாளாளர் காஜா நஜ்முதீன், பொருளாளர் கலீல் அகமது, உதவிசெயலாளர் ஜமால்முகமது, முதல்வர் முகமதுசாலிகு, துணைமுதல்வர் முகமதுஇப்ராகிம் உள்ளிட்டோர் என்எஸ்எஸ் அமைப்பை பாராட்டினர்.

Post a Comment

0 Comments