நோன்பின் சட்டங்கள்...!

ஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவேநோன்பு தொடர்பாக ஒரு தெளிவான விளக்கத்தைப் பெற்றுஅதன் படி எமது வணக்க வழிபாடுகளை அமைத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இப்பிரசுரம் வெளியிடப்படுகிறது. புனித ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது சக்தியுள்ள அனைத்து முஸ்லிம்கள் மீதும் கட்டாயக் கடமையாகும்.

ரமழான் மாதம் எத்தகையது என்றால் அம்மாதத்தில் தான் மனிதர்களுக்கு வழிகாட்டக் கூடியதும்,தெளிவான சான்றுகளைக் கொண்டதும், (நன்மை தீமைகளை) வேறுபடுத்திக் காட்டக் கூடியதுமான திருக்குர்ஆன் அருளப்பட்டது. ஆகவே, உங்களில் யார் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதத்தில் நோன்பு நோற்க வேண்டும்.
(அல்குர்ஆன் 2:185)

நோன்பின் நோக்கம்:
'யார் பொய்யான பேச்சுக்களையும் பொய்யான நடவடிக்கைகளையும் விடவில்லையோ, அவர் பசித்திருப்பதோ,தாகித்திருப்பதோ அல்லாஹ்வுக்குத் தேவையில்லை என்று நபி (ஸல்) கூறினார்கள்.'
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி, திர்மிதி,இப்னுமாஜா.

'நோன்பு நோற்றிருக்கும் போது, உங்களிடம் ஒருவர் சண்டைக்கு வந்தால் - அறியாமையாக நடந்து கொண்டால் - ஏசினால் நான் நோன்பாளி எனக் கூறிவிடுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.'
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி, திர்மிதி.

நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பயன்கள்:
'ஒவ்வொரு நன்மையான காரியத்திற்கும் பத்து முதல் எழுநூறு மடங்கு வரை பரிசு வழங்கப்படுகிறது. ஆனால், நோன்பு எனக்கே உரியது. எனவே, அதற்கு நானே பரிசளிப்பேன் என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.'
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி.

'யார் ரமழான் மாதத்தில் நம்பிக்கையுடனும் மறுமைப் பயனை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ, அதற்கு முன் அவர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.'
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி.

ரமழான் மாதத்தை தீர்மானம் செய்தல்:
'நீங்கள் பிறை பார்த்து நோன்பைத் துவங்குங்கள்! பிறை பார்த்து நோன்பை விடுங்கள்! உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால்,ஷஅபான் மாதத்தின் நாட்களை முப்பது நாட்களாக முடிவு செய்து கொள்ளுங்கள்.
'(நூல்: புகாரி, முஸ்லிம்)

ஸஹருக்கு அறிவிப்புச் செய்தல்:
மக்கள் உறக்கத்திலிருந்து விழித்து ஸஹர் செய்ய வேண்டியுள்ளதால்,ஸஹர் செய்வதற்காக மக்களை எழுப்பிவிடக்கூடிய ஏற்பாடு நபி (ஸல்) அவர்களால் செய்யப்பட்டிருந்தது. பிலால் (ரலி), அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் (ரலி) ஆகிய இரண்டு முஅத்தீன்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இருவரது குரலும் மக்களுக்கு நன்கு பரிச்சியமாகி இருந்தது. ரமழான் மாதத்தில் ஸஹருக்கு ஒரு பாங்கும், சுப்ஹ் தொழுகைக்கு ஒரு பாங்கும் என இரண்டு பாங்குகள் சொல்ல நபி (ஸல்) அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

'பிலாலின் அதான் (பாங்கு) ஸஹர் செய்வதிலிருந்து உங்களைத் தடுக்காது. ஏனெனில், (இரவில்) நின்று வணங்கியவர் இல்லம் திரும்புவதற்காகவும் உறங்குபவர் விழிப்பதற்காகவுமே அதான் (பாங்கு) சொல்வார் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.'
அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி), நூல்: புகாரி, முஸ்லிம்,அபூதாவூத்.

'பிலால் இரவில் அதான் (பாங்கு) சொல்வார். இப்னு உம்மி மக்தூம் அதான் (பாங்கு) சொல்லும் வரை நீங்கள் உண்ணுங்கள் பருகுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.'
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி, முஸ்லிம், நஸயீ.

ஸஹர் உணவு:
'நீங்கள் ஸஹர் நேரத்தில் உண்ணுங்கள்! ஏனெனில், ஸஹர் நேர உணவில் பரகத் (புலனுக்குத் தெரியாத மறைமுகமான பேரருள்) உள்ளது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.'
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி), நூல்: புகாரி, முஸ்லிம்,திர்மிதி.

'நமது நோன்புக்கும் வேதம் கொடுக்கப்பட்ட (யூத, கிறிஸ்த)வர்களின் நோன்புக்கும் வித்தியாசம் ஸஹர் நேரத்தில் உண்பதாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.'
அறிவிப்பவர்: அம்ர் பின் அல்ஆஸ் (ரலி), நூல்: முஸ்லிம்.

குளிப்பு கடமையான நிலையில் ஸஹர் செய்யலாமா?
'ரமழான் மாதத்தில் நபி (ஸல்) அவர்கள் குளிப்புக் கடமையானவர்களாக சுப்ஹ் நேரத்தை அடைவார்கள். (அந்த நிலையில்) நோன்பும் நோற்பார்கள்.'
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி, முஸ்லிம்,

நோன்பின் நேரம்:
சுப்ஹ் நேரம் முதல் சூரியன் மறையும் வரை நோன்பின் நேரமாகும். அதாவது, சுப்ஹ் நேரம் துவங்கியது முதல், சூரியன் மறையும் வரை உண்ணாமல், பருகாமல், உடலுறவு கொள்ளாமல் இருந்து நோன்பை முழுமைப்படுத்த வேண்டும்.

உஷ்னத்தைத் தணிக்கலாமா?
'நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது, வெப்பத்தின் காரணமாக தமது தலையில் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்ததை நான் பார்த்துள்ளேன் என்று நபித்தோழர் ஒருவர் அறிவிக்கிறார்.'
(நூல்: அஹ்மத், அபூதாவூத், நஸயீ)

எனவே, நோன்பாளி சூட்டை தணிப்பதற்காக குளிக்கலாம், தலையில் நீரை ஊற்றிக் கொள்ளலாம்.

நோன்பில் மறதியாகச் செய்யும் காரியத்திற்கு:
'ஒரு நோன்பாளி மறதியாக ஏதேனும் சாப்பிட்டுவிட்டால், அல்லது பருகிவிட்டால், அவர் தனது நோன்பை நிறுத்திவிடாமல் பூர்த்தியாக்கட்டும். ஏனெனில், அவருக்கு உணவளித்ததும், அருந்தச் செய்ததும் அல்லாஹ்வேயாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.'
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி, முஸ்லிம்.

எனவே, நோன்பாளி மறதியாக உண்பதால் நோன்பு முறிந்து விடாது. வேண்டுமென்று யாராவது உண்டால், அல்லது பருகினால் நோன்பு முறிந்து விடும்.

பல்துலக்கலாமா?
'நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது எண்ணிச் சொல்ல முடியாத தடவை பல் துலக்கியதை நான் பார்த்துள்ளேன்.'
அறிவிப்பவர்: ஆமிர் (ரலி), நூல்: திர்மிதி.
எனவே, நோன்புடன் பற்துலக்குவது நோன்பை முறித்துவிடாது.

உணவை ருசி பார்த்தல்:
உணவு சமைப்பவர்கள் சமைக்கும் போது, உணவுப் பொருட்களை ருசி பார்த்து விட்டு அந்த எச்சிலைத் துப்பிவிட வேண்டும்.

உறக்கத்தில் விந்து வெளியேறினால்:
'நோன்பாளி கட்டியணைப்பது பற்றி ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். அவருக்கு அனுமதி அளித்தார்கள். மற்றொருவர் வந்து கேட்டபோது, அவருக்கு அனுமதி மறுத்தார்கள். அனுமதி வழங்கப்பட்டவர் முதியவராகவும், அனுமதி மறுக்கப்பட்டவர் இளைஞராகவும் இருந்தனர்.'
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: அபூதாவூத்.

'தூக்கத்தின்போது, (கனவில்) விந்து வெளிப்பட்டால், நோன்பை விட்டுவிட வேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.'
(நூல்: அபூதாவூத்)

எனவே, நோன்பாளிக்கு உறக்கத்தில் விந்து வெளியேறினால் நோன்பு முறிந்து விடாது. சுயமாக யாராவது வெளியேற்றினால் நோன்பு முறிந்துவிடும்.

சுருமா, வாசனைப் பொருட்கள் பாவிக்கலாமா?
'சுருமா, பூசிக்கொள்வதால் நோன்பு முறிந்து விடாது.'
(நூல்: புகாரி, திர்மிதி.)

(வாசனைப் பொருட்கள், வைத்தியத்திற்காக ஊசி போட்டுக்கொள்ளுதல் போன்றவற்றாலும் நோன்பு முறியாது.)

நோன்பை முறிக்கும் செயல்கள்

உடலுறவு, உண்ணல், பருகல்:

ஒருவர் வேண்டுமென்று உண்பதும், குடிப்பதும், பகல் நேரத்தில் உடலுறவு கொள்வதும் நோன்பை முறிக்கும்.

மூக்குத் துவாரத்தால் நீரை உட்செலுத்தல்:
'நோன்பாளி வுழூச் செய்யும் போது, மூக்குக்கு அளவுகடந்து தண்ணீர் செலுத்தலாகாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.'
அறிவிப்பவர்: லகீத் பின் ஸபீரா (ரலி), நூல்: அபூதாவூத்.

இரத்தம் குத்தியெடுத்தல்:
'இரத்தம் குத்தி எடுத்தவரும், எடுக்கப்பட்டவரும் நோன்பை முறித்து விட்டனர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.'
அறிவிப்பவர்: ராபிவு பின் கதீஜா (ரலி), நூல்: திர்மிதி.

வேண்டுமென்றே வாந்தியெடுத்தல்:
'எவருக்கு வாந்தி வந்ததோ, அவர் மீது நோன்பு கழா|இல்லை. யார் வேண்டுமென்று வாந்தி எடுத்தாரோ, அவர் நோன்பைக் கழாச் செய்யட்டும்' என்பது நபிமொழி.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: திர்மிதி, அபூதாவூத்.

நோன்பு திறத்தல்:

'யாருக்கு பேரீச்சம் பழம் கிடைக்கிறதோ, அவர் அதன் மூலம் நோன்பு திறக்கட்டும்! கிடைக்காதவர்கள் தண்ணீர் மூலம் நோன்பு திறக்கட்டும். ஏனெனில், அது தூய்மையானதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.'

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி), நூல்: நஸயீ.


'நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு திறக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். மற்றொன்று, தனது இறைவனைச் சந்திக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சியாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.'

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி.


நோன்பு திறப்பதை விரைவு படுத்தல்:

'நோன்பு திறப்பதை விரைந்து செய்யும் காலமெல்லாம், மக்கள் நன்மையில் உள்ளனர் என்பது நபி (ஸல்) அவர்களின் பொன்மொழி.'

அறிவிப்பவர்: அபூதர் (ரலி), நூல்: அஹ்மத்.



சுன்னத்தான நோன்புகள

ஆறு நோன்புகள்:

ரமழான் மாதத்திற்கு அடுத்த ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகள் நோற்பதற்கு நபி (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளார்கள்.

'யார் ரமழான் மாதம் நோன்பு நோற்று, அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதம் ஆறுநாட்கள் நோன்பு நோற்கிறாரோ, அவர் காலமெல்லாம் நோன்பு நோற்றவராவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.'

அறிவிப்பவர்: அபூ அய்யூப் (ரலி), நூல்: முஸ்லிம், அபூதாவூத்,திர்மிதி.


வியாழன் மற்றும் திங்கள் தோறும் நோன்பு நோற்பது:

'நபி (ஸல்) அவர்கள் திங்கள், வியாழன் ஆகிய நாட்களைத் தேர்ந்தெடுத்து நோன்பு நோற்று வந்தார்கள்.'

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: அஹ்மத், நஸயீ, திர்மிதி, இப்னுமாஜா.

'ஒவ்வொரு வியாழன் மற்றும் திங்கட்கிழமைகளில் அமல்கள் (இறைவனிடம்) சமர்பிக்கப்படுகின்றன. எனவே, நான் நோன்பு நோற்றுள்ள நிலையில் எனது அமல்கள் சமர்பிக்கப்படுவதை நான் விரும்புகிறேன் என்று நபி () அவர்கள் கூறியுள்ளார்கள்.'அறிவிப்பவர்:

அபூஹுரைரா (ஸல்), நூல்: அஹ்மத், திர்மிதி, இப்னுமாஜா.





அரபா நோன்பு:

துல்ஹஜ் மாதம் பிறை ஒன்பது அன்று ஹாஜிகள் அரபாவில் தங்குவார்கள். அன்றைய தினம் ஹாஜிகள் தவிர்ந்த மற்றவர்கள் நோன்பு நோற்க வேண்டும்.

'அரபா நாளில் நோன்பு நோற்பது அதற்கு முந்திய வருடம், மற்றும் அடுத்த வருடத்திற்கான பரிகாரமாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.'

 (நூல்: முஸ்லிம்)


நோன்பு நோற்கக் கூடாத நாட்கள்:

நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள், அதையடுத்த மூன்று நாட்கள் ஆகிய ஐந்து நாட்கள் நோன்பு நோற்பது நபி (ஸல்) அவர்களால் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், ஷஅபான் முப்பதாம் இரவா? ரமழானின் முதல் இரவா? என்ற சந்தேகம் ஏற்படும் நாளிலும் நோன்பு நோற்பதை நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள்.

'நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரண்டு நாட்களில் நோன்பு நோற்கத் தடை விதித்தார்கள்.'

அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி), நூல்: புகாரி, முஸ்லிம்.


'தஷ்ரீகுடைய நாட்கள் (துல்ஹஜ் பிறை 11,12,13) உண்பதற்கும் பருகுவதற்கும் உரிய நாட்களாகும். அந்நாட்களில் எந்த நோன்பும் கிடையாது என்று பிரகடனம் செய்யுமாறு எனக்கு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.'

அறிவிப்பவர்: ஸஃது (ரலி) நூல்: அஹ்மத்.


'(ரமழானா? ஷவ்வாலா? என்று) சந்தேகம் உள்ள நாளில் யார் நோன்பு நோற்கிறாரோ அவர் நபி () அவர்களுக்கு மாறு செய்து விட்டார்.'

அறிவிப்பவர்: அம்மார் (ரலி), நூல்: புகாரி.



இரவு வணக்கம் (கியாமுல் லைல்)

புனித ரமழானின் இரவு காலங்களில் நின்று வணங்குவதை நபி (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளார்கள்.


எல்லா நாட்களிலும் கியாமுல் லைல் தொழுகையை தொழவேண்டும். எனினும், ரமழான் மாதத்தில் இந்த தொழுகைக்கு அதிக அளவு ஆர்வமூட்டப்பட்டுள்ளது. 'யார் ரமழானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர் நோக்கியும் தொழுகிறாரோ அவரது முன்பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன' என்ற கருத்தில் பல ஹதீஸ்கள் உள்ளன.
லைலத்துல் கத்ர் இரவ

ரமழான் மாதத்தில் மகத்துவமிக்க ஓர் இரவு உள்ளது. 'இந்தத் திருக்குர்ஆனை மகத்துவமிக்க ஓர் இரவில் நாம் அருளியுள்ளோம். மகத்துவமிக்க இரவைப்பற்றி உமக்குத் தெரியுமா? அந்த மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விட சிறந்ததாகும்.'

(அல்குர்ஆன் 97:1-3)

'லைலத்துல் கத்ர் இரவை ரமழானில் கடைசி பத்து நாட்களில் ஒற்றை இரவுகளில் நீங்கள் தேடுங்கள்'என்பது நபிமொழி.

 (நூல்: புகாரி)


இஃதிகாப

கடைசிப் பத்து நாட்களில் நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலிலேயே தங்கியிருக்கும் இஃதிகாப் எனும் வணக்கத்தை செய்துள்ளார்கள்.'நபி (ஸல்) அவர்கள் ரமழானின் கடைசிப் பத்து நாட்களில்,அவர்கள் மரணிக்கும் வரை இஃதிகாப் இருந்தார்கள்.'

(நூல்: புகாரி, முஸ்லிம்)

Post a Comment

0 Comments