இந்த ஆண்டுக்கான ஹஜ் புனிதப் பயணிகள் 23–ந் தேதி குலுக்கல் மூலம் தேர்வு அரசு அறிவிப்பு

தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மைச் செயலாளர் க.அருள்மொழி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்வதற்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள், தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவால் பெறப்பட்டுள்ளன. ஆனால், தமிழ்நாட்டிற்கான ஒதுக்கீடு சுமார் 3 ஆயிரம் மட்டுமே. எனவே, மும்பை, இந்திய ஹஜ் குழுவின் அறிவுரைப்படி, இந்த ஆண்டுக்கான புனிதப் பயணிகளைத் தெரிவு செய்ய, குலுக்கலை (குறா) நடத்த தமிழ்நாடு மாநில ஹஜ் குழு முடிவு செய்துள்ளது.

இந்த நிகழ்ச்சி வரும் 23–ந் தேதி மாலை 4.00 மணியளவில், சென்னை, ராயப்பேட்டை, புதுக்கல்லூரி வளாகத்திலுள்ள ஆனைக்கார் அப்துல் ஷுக்கூர் கலையரங்கத்தில் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு மாநில ஹஜ் குழு மூலமாக ஹஜ் 2013–ல் பயணத்திற்காக விண்ணப்பித்துள்ள புனிதப் பயணிகள், இக்குலுக்கலில் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை அமைதியாகவும், சிறப்பாகவும் நடத்துவதற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments