இஸ்லாம் மார்க்கத்தை தழுவினார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா : டுவிட்டரில் விளக்கமளித்தார்..!

ஏ.ஆர்.ரஹ்மானை போன்று பிரபல இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவின் 2வது மகன் யுவன் ஷங்கர் ராஜா, இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார். இதனை அவரே, ஆம் நான் இஸ்லாம் மதத்தை பின்பற்றுகிறேன் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

அரவிந்தன் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான யுவன் ஷங்கர் ராஜா, தொடர்ந்து பல்வேறு படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்தார். சமீபத்தில் அவர் இசையமைப்பில் வெளிவந்த பிரியாணி படம் தான் அவரது 100வது படமாகும். அப்பாவை போன்று இவரும் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கிறார். 
இந்நிலையில் முதல் மனைவியுடன் விவாகரத்து, பிறகு அம்மாவின் மரணம், இரண்டாவது மனைவியுடன் மனக்கசப்பு என்று ஏகப்பட்ட மனக்குழப்பத்தில் இருந்தார் யுவன். இதற்கிடையே அவர் இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டதாக ஏற்கனவே தவகல்கள் வெளியான நிலையில் இப்போது அவரே தான் மதம் மாறியதை உறுதி செய்துள்ளார். 
இதுகுறித்து யுவன் சங்கர் ராஜா தனது டுவிட்டரில் , கூறியிருப்பதாவது: நான் இஸ்லாமை பின்பற்றுகிறேன்” இதனால் நான் பெருமை கொள்கிறேன். எனது இந்த முடிவினால் எனக்கும், எனது குடும்பத்தினருக்கும், குறிப்பாக எனது தந்தைக்கும் இடையே எந்தவொரு கருத்து வேறுபாடும் இல்லை . எனது குடும்பத்தினர் ஆதரவு அளித்துள்ளனர். அல்ஹம்துலில்லா ! ( இறைவனுக்கு நன்றி !) இவ்வாறு யுவன்சங்கர் ராஜா கூறியுள்ளார். 

யுவன் மதம் மாறிய பின்னணி...

யுவன் மதம் மாறிய பின்னணி பற்றி அவரது நண்பர்கள் வட்டாரத்தில் விசாரித்தபோது நமக்கு கிடைத்த சில தகவல்கள் இதோ...

கசந்த இல்லற வாழ்வு

சினிமாவில் பிரபலமாக இருந்தாலும் இல்லற வாழ்வு யுவனுக்கு சோகமாக அமைந்தது என்று தான் கூற வேண்டும். 2005ம் ஆண்டு தனது நீண்டகால தோழியான சுஜாயா என்ற பெண்ணை மணந்து கொண்டார் யுவன். ஆனால் இந்த வாழ்க்கை இரண்டு ஆண்டுகள் தான் நீடித்தது. 2007ம் ஆண்டே இவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்தனர். பிறகு 2011ம் ஆண்டு ஷில்பா என்ற பெண்ணை மணந்து கொண்டார். இவர்களது திருமண வாழ்வு நன்றாக சென்று கொண்டு இருந்தது. இப்போது அந்த திருமண உறவிலும் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அந்தப்பெண் இப்போது தனது அம்மாவுடன் லண்டன் சென்று விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே யுவனின் தாயாரும் மரணம் அடைய மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். இதனால் சினிமாவில் கூட முன்பு போல் அவரால் சரியாக பாடல்களை கூட கொடுக்க முடியாமல் போனது. 

மூன்றாவது திருமணத்திற்காக மதம் மாற்றம்?

இந்தநிலையில் யுவன், சமீபத்தில் சிங்கப்பூரிலோ, மலேசியாவிலோ ஒரு பெரிய பணக்கார இஸ்லாம் வீட்டை பெண்ணை பார்த்ததாகவும், அவர்கள் இருவருக்கும் பிடித்து போக திருமணம் செய்ய முடிவெடுத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் மூன்றாவது திருமணம் செய்யபோகும் பெண்ணிற்காகத்தான் அவர் இஸ்லாம் மதத்திற்கு மாறியிருப்பதாகவும் கூறப்படுகிறது. 

வீட்டில் எதிர்ப்பு!

யுவனின் இந்த செயலுக்கு அவரது அப்பா இசைஞானி இளையராஜா, அவரது சகோதரர்கள், சகோதரிகள், உறவினர்கள், சினிமா மற்றும் பிறதுறை நண்பர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நமக்கும், நமது குடும்பத்திற்கு இது சரிப்பட்டு வராது என்று எவ்வளவோ சொல்லியும் யுவன் தனது கொள்கையில் பிடிவாதமாக இருந்துள்ளார்.

வீட்டை விட்டு இளையராஜா வெளியேற்றம்?

எவ்வளவு சொல்லியும் யுவன் தனது கொள்கையில் பிடிவாதமாக இருந்ததால் ஒருகட்டத்தில் இளையராஜா வெறுப்படைந்து தி.நகரில் உள்ள தனது சொந்த வீட்டை விட்டு வெளியேறி சிலகாலம் தனது மூத்தமகன் கார்த்திக் ராஜாவின் வீட்டில் தங்கியிருந்துள்ளார். பிறகு யுவன் வந்து பேச, தான் மட்டும் வரமாட்டேன் என்று சொல்லி கார்த்திக்கையும் தன்னோடு அழைத்து வந்து பிறகு எல்லோரும் தற்போது ஒரே வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். 

இதேப்போன்று இளையராஜா ஒவ்வொரு முறையும் தனது வீட்டில் கொலு வைத்து பிரபல பின்னணி பாடகர்களை எல்லாம் அழைத்து தன் வீட்டில் பாட வைப்பார். ஆனால் சென்றாண்டு கொலு நடத்த கூடாது என்று யுவன் தெரிவித்துள்ளார். பின்பு கொலுவை தவிர்க்கும் நோக்கோடு அவசரமாக மும்பை கிளம்பி சென்றுள்ளார். ஆனால் இளையராஜா போனில் சத்தம் போட பிறகு அவசரஅவசரமாக மீண்டும் வீடு திரும்பியுள்ளார். 

குரான் பரிசளித்த அமீர்?

யுவன் மதம் மாறிய பின்னர், அவருக்கு இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை பிரபல இயக்குநர் அமீர் பரிசளித்துள்ளதாகவும், தற்போது அந்த குரானை தான் யுவன் தினமும் படித்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது. யுவன் கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு மேலாகவே இஸ்லாம் மதத்தை பின்பற்றி வருகிறாராம். அவர்கள் மத வழக்கப்படி தினமும் 5 வேளை தொழுகை செய்வதையும் கடைபிடித்து வருகிறாராம்.


Post a Comment

0 Comments