'சிறு மக்கா' வழுத்தூர்..!

'சிறு மக்கா' என்ற 
சிறுவூர்! 
ஆன்மீக சிந்தையில் 
பெருவூர்!
பெரு ஞானியர்களை -
இறை நேசர்களை சுமந்த
கருவூர்!
'பெருமானார்' மீது
நேசம் கொண்ட
திருவூர்! - அது
அருதவ
'முஹையதீன்'
புகழ் பாடும்
வழுத்தூர்!

அன்று.....
காலரா பேதி!
ஊரெங்கும்
மரண சேதி!
தேதிக்கு தேதி
இதே சேதி!
இடுகாடு எடுத்துசெல்ல
நாதியற்று போமோ
என்ற மன பீதி!
விதி சுமந்து,
மதியிழந்து,
கதி கலங்கி
நின்றது - நம்
சாதி சனம்!

என்னவாகுமோ
நாளை?
என்று
எண்ணலாயினர்
நாளை!
அவ்வேளை
கனவில் வந்த
சேதி
வயிற்றில் வார்த்தது
பாலை!
காலை - மாலை
பாராமல்
ஆளை
மாய்த்த நோய்;
போய் தொலைந்திட
இனி நலம் பெருகிட
வளம் கொழித்திட
'முகையதீன்' பேரில்
'நாலு கொடி' சுமந்து
ஊர் சுற்றி வந்து
அன்னதானம்
செய்ய சொன்னது
அந்த சேதி!
மெய்பட்டது கனவு
நெய்யிட்ட சோற்றில் - ஏழை
கைபட்டது!
நம்பி
காணிக்கை குவிந்தது!
நலமடைந்தோர்
கும்பி குளிர்ந்தது!
பிணி நீங்கியது
விதியை, அன்னதான
மதி வென்றது!

அன்று முதல்
அன்னதானம்
அரங்கேறியது!
நன்றி மறவாமல்
இன்றும்
தொடர்கிறது!
குறை சொல்லி
அதை நிறுத்திட
அதிகாரம்
யாருக்குண்டு?
வரும்
காலமெல்லாம்
தொடரும்!
இன்ஷா அல்லாஹ்!

முஹம்மது ஜாபர் சாதிக் 

Post a Comment

0 Comments